பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
பாடகர் லதா மங்கேஷ்கர் காலமானார் என்ற செய்தி வருத்தமும், வேதனையும் தருகிறது. மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் பிறந்த அவர் குஜராத்தி மொழியிலும், மராத்தி மொழியிலும் பாடத் தொடங்கி பின் நாட்டின் பல மொழிகளிலும் அவர் குரல் ஒலித்தது. இதுவரை சுமார் 30 ஆயிரம் பாடல்களை 36 மொழிகளில் அவர் பாடியிருப்பது இமாலய சாதனையாகும்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களுக்கு பிறகு, பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரிய இரண்டாவது இசைக்கலைஞர். தனது திரைப்பட இசைக்காக மராட்டிய அரசின் விருதும் பெற்றுள்ளார்.
லண்டன் ராயல் ஆல்பர்ட் அரங்கில் இசைத்த பெருமையும், பிரான்ஸ் அரசாங்கத்தின் உயரிய சிவிலியன் விருதைப்பெற்ற பெருமையும் கொண்டவர் லதா மங்கேஷ்கர்.
தமிழில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் 'வளையோசை ...' உட்பட சிறப்பான பாடல்களை தமிழில் பாடியுள்ளார். இன்னும் ஏராளமான சிறப்புகளைக் கொண்ட பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரது இழப்பால் வாடும் குடும்பத்தார் மற்றும் இசைக்கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.