tamilnadu

img

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது 

நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஆழ்வார் பேட்டை சீதாம்மாள் காலனி 2 வது தெருவில் இயங்கி வந்த நடிகர் சூர்யா அலுவலகத்தில் வெடி குண்டு வந்துள்ளதாக திங்களன்று தமிழக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்தது. இதையடுத்து சூர்யா அலுவலகத்திற்கு சென்ற தேனாம்பேட்டை காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அங்கிருந்த சூர்யா அலுவலகம் கடந்த 6 மாதங்களுக்கு முன் அடையாறுக்கு மாற்றப்பட்டிருப்பதாக அறிந்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி அங்கு நடத்த சோதனையில் எந்தவெடி பொருளும் கண்டறியப்படவில்லை.  
இதையடுத்து தேனாம்பேட்டை காவல்துறையினர் சைபர் குற்றப்பிரிவினருடன் இணைந்து நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இவர் ஏற்கனவே முதல்வர் பழனிச்சாமி, நடிகர் ரஜினி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.