tamilnadu

சென்னை, காஞ்சிபுரம் முக்கிய செய்திகள்

சென்னையில் 1,092 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
சென்னை, ஜூன் 19-  தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி தனிப்படை அதிகாரிகள் தொடர்ந்து கடைகளில் சோதனை செய்து வருகின்றனர். இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 1,734 கடைகளில் தனிப்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த கடைகளில் 1,092.45 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய மற்றும் விற்பனை செய்த 130 பேருக்கு ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

சூதாடிய  10 பேர் கைது
போரூர், ஜூன் 19-  சாலிகிராமம் வேலாயுதம் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக விருகம்பாக்கம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடைபெற்றது தெரியவந்தது.இதையடுத்து உடனடியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட வடபழனியை சேர்ந்த சரவணன், ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தாமஸ் உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு:  மக்கள் மறியல்
மறைமலைநகர், ஜூன் 19-  மறைமலைநகர் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் கூடலூர், கடம்பூர், களிவந்தப்பட்டு, சட்டமங்கலம், பேரமனூர், தைலாவரம், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், வல்லாஞ்சேரி, கோணாதி, திருக்கச்சூர், செங்குன்றம், மட்டான ஒடை, நின்னைக்கரை, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கோடைக்காலங்களில் ஆண்டுதோறும் மறைமலைநகர் நகராட்சியில் கடுமையான குடிநீர் பிரச்சனை நிலவியும் இதுவரை  அதிகாரிகள் குடிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காணவில்லை. மறைமலைநகர் 7 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் நகராட்சி அதிகாரியிடம் முறையிட்டு, ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதன் மீது அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பொத்தேரி ஏரி, நின்னைக்கரை ஏரி, உள்ளிட்ட நகராட்சியில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தனியார் கல்லூரி, தொழிற்சாலை மற்றும் வீடுகளின் கழிவுநீர் விடப்படுகிறது. இதனை தடுப்பதற்கு மறைமலைநகர் நகராட்சி அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான முயற்சியும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.  இந்நிலையில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் எனக் கூறி  அப்பகுதி மக்கள்  மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த  காவவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  நகராட்சி அதிகாரிகள் வரவேண்டும் எனக் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என  கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.