tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி
ராயபுரம்,நவ.27- ஆந்திராவை சேர்ந்தவர்கள் குமார் (30), கெங்கப்பன். இவர்கள் திருவொற்றியூர், விம்கோ நகரில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். செவ்வாயன்று நள்ளிரவு 2 பேரும் விம்கோ நகர்- கத்திவாக்கம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியே சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் 2 பேர் மீதும் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 2 பேரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் தற்கொலை
போரூர்,நவ.27- மதுரவாயல் மேட்டுக்குப்பம் ரோடு மதுரநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் மகேஸ்வராவ். இவரது மனைவி பாக்ய லட்சுமி. இவர்களது வளர்ப்பு மகன் வெங்கட்ராஜ் (22) தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.  செவ்வாயன்று காலை 8.30மணிக்கு வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். இந்நிலையில் பகல் 11 மணியளவில் வேலைக்கு சென்ற தாய் பாக்யலட்சுமி வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் வெங்கட்ராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ‘எனக்கு வாழ விருப்பம் இல்லை. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என்று வெங்கட்ராஜ் கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.