tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

திருவேற்காடு அருகே வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் 
பூந்தமல்லி, அக்.17-திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு புதனன்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக இந்த பகுதியில் உள்ள மழை நீர் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  இதனால், அயனம்பாக்கம் அம்பேத்கர் சாலையை ஒட்டியுள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அங்குள்ள மக்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். பின்னர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் வானகரம்- அம்பத்தூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் வியாழனன்று காலை முதலே இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இது பற்றி தகவல் அறிந்து பூந்தமல்லி தாசில்தார் காந்தி மதி, மற்றும் நகராட்சி அதிகாரிகள் இங்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். மழை நீர் கால்வாய் வேகமாக சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இருந்தாலும் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையின் போது கிராம மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிட ப்பட்டது. இந்த மறியல் காரணமாக காலை 6 மணி முதல் 10  மணிவரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி
ராயபுரம்,அக்..17- மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் கவுரிசங்கர். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு ஒன்றறை வயதில் பூர்ணிமா என்ற குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களாக பூர்ணிமாவுக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு இருந்ததாகக் கூறப்படு கிறது.  இந்நிலையில் புதனன்று குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்துள்ளது. பின்னர் ஸ்டான்லி மருத்துவ மனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சையில் இருக்கும் போது குழந்தை இறந்துவிட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர் இணைப்பு பெற 19 ஆம் தேதி சிறப்பு முகாம்
சென்னை, அக்.17-கழிவு நீர் இணைப்பு பெற 19 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கம் 1 முதல் 2 பகுதிகளுக்குட்பட்ட காமராஜர் நகர், ஜே.ஜே. நகர், எஸ்.வி.எம். நகர், உலகநாதபுரம், நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், முகத்துவாரம் குப்பம், அண்ணா நகர், கமலாம்மாள் நகர், சின்னக்குப்பம், காந்தி நகர், இந்திரா நகர், காட்டுக்குப்பம், நேரு நகர், பெரியக்குப்பம், திலகர் நகர் மற்றும் வள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. எனவே வீடுகளுக்கு கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு சென்னை குடிநீர் வாரியம், திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட் லேனில் உள்ள பகுதி அலுவலகம் -1 ல் வரும் 19 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொதுமக்கள் கழிவுநீர் இணைப்பிற்கான தொகையை வரைவு காசோலையாக சிறப்பு முகாமிலேயே செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இந்த கழிவுநீர் இணைப்பு வரும் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். விவரங்களுக்கு 8144930901, 8144930201 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.   இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.