மகாவிஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கம்
சென்னை, செப்.9- சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி சனாதன மற்றும் மூடநம்பிக்கை களை பரப்பும் வகையில் பேசினார்.
மேலும், மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், மகாவிஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் ஆபாசபேச்சு பேர்வழி மகா விஷ்ணு வின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூ டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இன்று அறிக்கை தாக்கல்
இந்த சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை 3 நாட்களில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, விசாரணை அறிக்கை செப்டம்பர் 9 அன்று தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 10 அன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
சென்னை, செப்.9- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் விழாக் காலங்களில் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள். பயணி களின் வசதிக்காகவும், கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) போகி பண்டிகை, 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை (செவ்வாய்க்கிழமை), 15 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் (புதன்கிழமை), 16 ஆம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோர் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அந்த வகையில், ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12 ஆம் தேதியும், ஜனவரி 11 ஆம் தேதிக்கு பயணம் செய்வோர் 13 ஆம் தேதியிலும், ஜனவரி 12 ஆம் தேதிக்கு வரும் 14 ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
ஜனவரி 13 ஆம் தேதி போகி பண்டிகை அன்று பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15 ஆம் தேதியும் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரி வித்துள்ளது.
6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செப்.9- சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நில விய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல மாக வலுப்பெற்றது, பூரியிலிருந்து (ஒடிசா) 50 கி.மீ கிழக்கு-தென் கிழக்கே, கோபால்பூரில் இருந்து (ஒடிசா) 140 கி.மீ கிழக்கு-வடகிழக்கு, பாதிப்பில் இருந்து (ஒடிசா) 90 கி..மீ தென்மேற்கே, கலிங்க பட்டினத்தி லிருந்து (ஆந்திரா) 260 கி.மீ கிழக்கு-வட கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து செப்டம்பர் 9 அன்று இரவு ஒடிசா கடற்கரை, பூரிக்கு அருகில் கடந்தது.
அதன் பிறகு இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலு குறையக்கூடும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி பண்டிகை: செப்.17 அரசு விடுமுறை
சென்னை,செப்.9- மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 4 ஆம் தேதி மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் தெரியாததால், செப்டம்பர் 16-க்கு பதில், மறுநாள் செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்த அறிவிப்பை ஏற்று, தமிழக அரசு தற்போது செப்டம்பர் 17 ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளி யிட்டுள்ள அறிவிக்கையில், “செலாவணி முறிச்சட்டத்தின் அடிப்படையில், செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதில், செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாடி நபி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படு கிறது. இந்த பொது விடுமுறையானது அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.
கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது : அமீர்
சென்னை, செப்.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திரைப்பட இயக்குநர் அமீர் எழுதியுள்ள கடிதம் வருமாறு: எந்தவிதமான தகுதியோ, அறிவில் தேர்ச்சியோ, ஞான முதிர்ச்சி, முற் போக்குச் சிந்தனை இவ்வாதவர்களை மாணவர்களின் முன்னிலையில் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை நாய கர்களாக சித்தரிப்பதும் மாணவர்களுக்கு அவர்களை அறிவுரை வழங்க சொல்வது மிகவும் வேதனைக்குரியதாகும்.
திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களையும் திரைப்பட அறிமுக விழாக்களையும் கல்வி நிறுவன வளா கங்களில் நடத்துவது கல்வி கற்க செல்லும் மாணவர்களுக்கு கேடு விளைவிக்கக் கூடியது. மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங் களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை, செப்.9- குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகினர். முன்னாள் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை காவல் ஆணை யர் ஜார்ஜ் உட்பட 27 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சென்னை ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்க ளுக்கு எதிரான வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜராகினர்.
ஐஏஎஸ் பயிற்சி முடித்த 10 பேர் பணி நியமனம்
சென்னை, செப்.9- கடந்த 2022 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளாக தேர்வான 10 பேருக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தலைமை செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தங்களது பயிற்சியை முடித்த 2022 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிடங்கள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி, உதவி ஆட்சியர்களாக குளித்தலை ஸ்ரீவாதி, தேவகோட்டை ஆயுஷ் வெங்கட் வத்ஸ், கோபிசெட்டிபாளையம் எஸ்.சிவானந்தம், திருக்கோவிலூர் ஆனந்த் குமார் சிங், ஸ்ரீபெரும்புதூர் பி.ஐ.ஆஷிக் அலி, பத்மநாபபுரம் வினய்குமார் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சார் ஆட்சியர்களாக கும்பகோணம் ஹிரிதயா எஸ்.விஜயன், குன்னூர் கே.சங்கீதா, பழநி எஸ்.கிஷன் குமார், பெரியகுளம் ரஜத் பீட்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்.20 முதல் பள்ளி காலாண்டுத் தேர்வு
சென்னை,செப்.9- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக் கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர் களுக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.