சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது, அது அரசின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பீகார் மாநிலத்தின் சாதிவாரி கணக்கெடுப்பு விபரங்களை அம்மாநில அரசு வெளியிட்டது. இதை அடுத்து, தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று எம்.முனுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது என்றும், அது அரசின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக அரசை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இவ்வழக்கை முடித்து வைத்தனர்.