tamilnadu

img

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரும்பு கூண்டில் சிக்கி சிறுத்தை புலி உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயது மதிக்கத்தக்க சிறுத்தை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் போது உயிரிழந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து வண்டலூரில்  அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காஅமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளை பாராமரித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஐ தாண்டியது. மாவட்டம் முழுவதும் தற்பொழுது 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக சென்னையின் புறநகர் மாவட்டமாக விளங்கும் செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் பாதித்து வருகிறது. பொதுமக்கள் அடுத்த இரண்டு வாரத்திற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த பணியாளர்களுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு  வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து பூங்கா நிர்வாகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் 76 பூங்கா ஊழியர்களுக்கு கொரோனா தோற்று உறுதியானது.

இதையடுத்து வருகின்ற 31ம் தேதி வரை உயிரியல் பூங்கா முழுமையாக மூடப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஊழியர்கள் மூலம் விலங்குகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவ கூடாது என்பதற்காக பூங்கா நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவை மூடி உத்தரவிட்டுள்ளது . அனைத்து ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

விலங்குகளுக்கு பரிசோதனை

இதனை அடுத்து விலங்குகளுக்கு மனிதர்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறதா என்பதை பரிசோதிக்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. அவ்வாறு 17 வயது பெண் சிறுத்தைக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது கூண்டில் திடீரென  கோளாறு ஏற்பட்டு சிறுத்தை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது . இதுவரை 16 விலங்குகளுக்கு ஒருநாள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனையின்போது சிறுத்தை உயிரிழந்ததால் தற்போது தற்காலிகமாக பரிசோதனைகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.  பரிசோதனை முடிவு வந்த பிறகு , தேவைப்பட்டால் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, 17 வயதுள்ள சிறுத்தை பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட போது கூண்டில் எந்திரக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

;