சென்னை, ஜூன் 9- தேர்தல்கள் வரும் சமயத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில் அல்லது ஒரே கோட்டத்தில் வேலை செய்துவரும் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களை வெளிமாவட்டத்திற்கு மாற்றுவது வழக்கம். தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்திய பிறகு பழைய இடத்திற்கு அவர்களாகவே விருப்பம் கேட்டுத் திரும்பிவிடுவார்கள்.ஆனால் தற்போது மக்களவைத் தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகளும் தளர்த்தப்பட்டுவிட்ட நிலையில், இன்ஸ்பெக்டர்களை மாற்றுவதில் காவல் துறை அதிகாரிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. வருமானம் இல்லாத இடத்தில் இருந்தவர்கள் பலரும் தேர்தல் நேரத்தில் வெளி மாவட்டங்களுக்கும், சென்னை போன்ற மாநகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த பகுதிகளில் வரும் வருவாயைப் பார்த்தவர்கள், மீண்டும் பழைய இடத்திற்கு போக மறுத்திருக்கிறார்கள். அதாவது இன்ஸ்பெக்டர்களிடம் வில்லிங் பெட்டிஷன் பெற்றுத்தான் பழைய இடத்திற்கு மாற்ற வேண்டும். வளமான காவல் நிலையத்திற்கு இடமாறுதல் பெற்ற இன்ஸ்பெக்டர்கள் பலர் வில்லிங் கொடுக்க மறுத்து, தனது இடத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பதாக காவல்துறை உயரதிகாரிகள் சொல்கிறார்கள். இதுதொடர்பாக காவல் துறை உயரதிகாரி ஒருவர், “தலைமை மீது பயம் இருந்தால் அனைத்தும் சரியாக நடக்கும். தலைமை மீது பயம் இல்லை என்றால் இப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆட்சியாளர்கள் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு நிர்வாகத்தின் மீது அக்கறை செலுத்தமுடியவில்லை. மேலும், காவல்துறை டிஜிபியின் மீது கீழ்மட்டத்தில் யாருக்கும் பயமில்லை. அவரை மதிப்பதும் இல்லை. காரணம் அதிகாரம், பதவி மீதான அவரது ஆசை. மேலே எப்படி இருக்கிறார்களோ அப்படித்தானே கீழ்மட்டத்திலும் இருப்பார்கள். முன்னரெல்லாம் தேர்தல் முன்னிட்டு அடுத்த மாவட்டங்களுக்கு டிரான்ஸ்பரில் சென்றவர்களுக்கு அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டாலே, வில்லிங் கொடுத்துவிட்டு பழைய பணியிடத்துக்கு சென்றுவிடுவார்கள். இப்போது அதுபோன்ற உத்தரவுகளை கொடுக்க யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை” என்று கடிந்துகொண்டார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பழைய இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய முடியாததால், காவல்துறையின் வேலைகள் சுணங்கிப் போயுள்ளதாக காவல்துறையினர் சொல்கிறார்கள்.