மதமோதலை உருவாக்கும் வகையில் கோவையில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமிற்கு தடை விதித்து தமிழக அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
கோவை, விளாங்குறிச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடந்த சில நாட்களாக பயிற்சி முகாம் நடத்தி வருகின்றனர். கோவையில் திட்டுமிட்டு மதமோதலை உருவாக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முகாம் நடத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் காவல்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இம்முகாமை பார்வையிடச் சென்ற கோவை காவல் துணை ஆணையரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து ரகளை செய்ததுடன், அவரை தாக்கும் நோக்கோடு கீழே தள்ளியுள்ளனர்.
ஏற்கனவே மத நிகழ்வுகள் கல்வி கூடங்களில் நடத்தக் கூடாது என வலியுறுத்தி மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதையும் மீறி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்த பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர். இதனை தடுப்பதற்கு கோவை மாநகர காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவே காவல்துறை அதிகாரிகளையே தாக்கியுள்ளனர்.
எனவே, காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், மதமோதலை உருவாக்கும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், சதி வேலைக்கு திட்டமிட்டு நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். அமை பயிற்சி முகாமை உடனடியாக ரத்து செய்வதுடன், இந்த அமைப்பினரின் மீது சட்டப்பூர்வ விசாரணை நடத்த வேண்டுமெனவும், இந்த முகாமிற்கு அனுமதித்த அளித்த பள்ளி நிர்வாகத்தின் மீதும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.