tamilnadu

ஓசூர் புத்தகத் திருவிழா: விஸ்வ இந்து பரிஷத் மிரட்டல்

கிருஷ்ணகிரி, ஜூலை 19- ஓசூரில் 8ஆவது புத்தகத் திருவிழா கடந்த 12ஆம் தேதி துவங்கியது. தினசரி 2,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். தினசரி பல தலைப்புகளில்  கருத்தரங்கம் நடைபெறுகிறது.  இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமையன்று (ஜூலை 20) திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்ற உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக விஸ்வ இந்து பரிஷத்தை (விஎச்பி) சேர்ந்த சிலர் புத்தக விழா நிர்வாகிகளிடம் செல்போனில் வீரமணி பேச இங்கு வரக்கூடாது என மிரட்டல் விடுத்து வருகின்றனர்.  மேலும் வீரமணி ஓசூருக்கு வரக்கூடாது அவர் இந்துக்களின் விரோதி என ஊர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.  காவல்துறை புத்தகத் திருவிழாவிற்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பதிலாக வீரமணி கலந்து கொள்வது பிரச்சனையை ஏற்படுத்தும், எனவே அவருக்கு பதில் வேறு பேச்சாளர்களை அழையுங்கள் என புத்தகத் திருவிழா நிர்வாகிகளை நிர்பந்தித்து வருகின்றனர்.   இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விழா நிர்வாகிகள், காவல்துறை புத்தகத் திருவிழாவிற்கு பாதுகாப்பு தரவேண்டும், விஸ்வ இந்து பரிஷத்தின் செயல்பாடு பேச்சுரிமையை, கருத்துரிமையை பறிப்பதாக உள்ளது. நாங்கள் மக்களுக்காக செய்து வரும் பணியை செய்ய விடாமல் தடுக்கவும், இலக்கியவாதிகள் பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகும். எனவே காவல் துறை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், புத்தகத் திருவிழா தொடர்ந்து நடைபெற பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.