கொம்பு முளைத்த நிலா சாந்தி சரவணன்
இக்கவிதை தொகுப்பு மூன்றாம் உலக ஹைக்கூ மாநாட்டில் ஜுன் 9 ஆம் நாள் 2024 அன்று மதுரையில் வெளியானது. புத்தகத்தின் தலைப்பே நம்மை சிந்திக்க தூண்டுகிறது. “”கொம்பு முளைத்த நிலா’”நிலவை பெண்ணோடும் மலரோடும் தொடர்பு படுத்தி பார்த்தும் கேட்டும் இருக்கிறோம். கவிஞரின் கற்பனையோ நிலவுக்கு கொம்பு முளைத்தது என்ற கோணம், நம்மை மாற்றி யோசிக்க வைத்து, நமது சிந்தனையை விரிவுபடுத்துகிறது. சில ஹைக்கூ கவிதைகள்:
இறந்தாலும்
இயற்கை சூழலை
பேணிக் காக்கும் பறவைகள்;
---
இடிந்த சுவரிடுக்கில் விழுந்தது
காக்கையின் பிணம்
முளைத்தெழுகிறது விதையொன்று
கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் இயற்கையைத் தாண்டியும் ஹைக்கூ கவிதைகளை அரசியல் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் எழுதுபவர் என “கன்னல் பூக்கும் மின்னல் வரிகள்” தலைப்பில் வெ. இறையன்பு அவர்கள் தனது முன்னுரையில் பதிவு செய்துள்ளது நிதர்சனம். ஹைக்கூ வாசித்தவுடன் ஒரு கிளர்ச்சியை வாசகனுக்கு ஏற்படுத்தவேண்டும்.அந்த கிளர்ச்சியை இந்த ஹைக்கூ தொகுப்பு வாசிக்கும்போது நமக்கு தருகிறது. இந்த நொடியில் வாழும் வாழ்க்கையை சூழலை பிரதிபலிக்கும் விதமாக ஒரு ஹைக்கூ;
மாறிவிடும்சீக்கிரம் வந்து பார்
தோட்டத்தில் பூனையின் மீது
சிட்டுக்குருவி
உணவு சங்கிலி தொடரை மூன்றே வரிகளில்படம் பிடித்துக் காட்டும் ஒரு ஹைக்கூ:
புழுவைக்கவ்விய
பூச்சியும் மிரண்டு போனது
சுவரில் பல்லி
கவிதைகளும் கதைகளும் ஒரு கண நேரத்தில் ஒருவருக்கு தோன்றும். அந்த நொடியை யார் இறுகப் பற்றி கொள்கிறார்களோ அவர்களால் மட்டுமே சிறந்த படைப்புகளை படைக்க இயலும். பிறகு அதுவே அந்த கவிஞனின் அடையாளமாகும்.
இந்த கவிதை தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு ஹைக்கூ கவிதையையும் வாசித்த பிறகு தியானித்து பார்த்தால் அதில் இருக்கும் அர்த்தங்களின் ஆழம் இன்னும் அதிகமாக புலப்படும் என்று வெ.இறையன்பு கூறியிருப்பது முற்றிலும் உண்மை. வாருங்கள் நாமும் வாசித்து தியானத்தில் ஆழ்வோம்.
கவிஞர் மு.முருகேஷ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
கொம்பு முளைத்த நிலா
மு. முருகேஷ்
பதிப்பகம்: அகநி வெளியீடு
பக்கங்கள்: 64
விலை: ரு. 100/- பேசி: 94443 60421
மண்டைக்காட்டு அம்மன் வரலாறும் வர்ணாசிரம ஆக்கிரமிப்பும் பி.இந்திரா
மனிதகுல வரலாற்றின் துவக்கத்தில் மனிதக்குழுக் களின் தலைமையாகவும், ஆதித் தாயாக வும் கொண்டாடப்பட்டவள் பெண். இன்றைய சமூகத்தில் அவளின் இரண்டாம் பட்சமான, அடிமைத்துவ மான, அசமத்துவமான நிலைமைகள் இருந்த போதும் இன்றும் இந்திய நிலப்பரப்பின் தெய்வங்களில் சம பங்கு வகிப்பவர்களாக பெண் தெய்வங்கள் கொண்டாடப்படுகின்றனர்.
காஷ்மீரத்து வைஷ்ணோ தேவி யும், வங்கத்தின் காளியும் தேசிய அளவி லான அடையாளங்கள் எனில்,
தமிழகத்தில் பழவேற்காட்டில் துவங்கி, காஞ்சி காமாட்சி, புதுவை முத்து மாரி, தில்லை சிவகாமி, மதுரை மீனாட்சி, நெல்லை காந்திமதி, கன்னியாகுமரி என்ற காரணப்பெயருக்கு உரித்தான பகவதி என பிரசித்தி பெற்ற அம்மன் வழிபாடு வலுவாக உள்ளது. நவராத்திரியும், அதை ஒட்டி தசராவும் புகழ் பெற்ற பெண் தெய்வ விழாக்கள்.
பொதுவாக சக்தியின் அம்சமாக இந்த தெய்வங்கள் கொண்டாடப்படுகின்றனர் என்றால், ஊருக்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள், விபத்துக்களில், வன்கொடுமைகளில் பலியானவர்கள் என பல அம்மன் கோவில் வரலாறுகள் நீள்கின்றன.
குமரி மாவட்டத்தில் மட்டுமன்றி, கேர ளத்திலும் கொண்டாடப்படும் தெய்வ மாக மண்டைக்காட்டம்மன் திகழ்கின் றார். பெண்களின் சபரிமலை என இந்த ஆலயம் போற்றப்படுகிறது. மாசி மாதம் பத்து நாட்கள் கொண்டாடப்படும் கொடை என்பது மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அளிக்கும் நாளாகும். கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டு மன்றி வட்டாரத்தில் பல ஊர்களிலும், தோப்புகளிலும், விளைகளிலும் மக்கள் கூடி படையல் வைத்து வழிபடும் மாவட்டத்தின் உச்சபட்ச திருவிழாக் களில் ஒன்றாகும். பல சாதியினரும், பல மதத்தினரும் பங்கேற்பது மட்டுமன்றி கொடை நிகழ்ச்சிகளில் பிரதான பாத்திரம் வகிக்கின்றனர் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
இக்கோவிலின் வாய்மொழி வரலாற்றையும், உண்மை வரலாறு மறைக்கப்படுவதற்காக எடுக்கப்படும் வர்ணாசிரமக் கோட்பாட்டின் முயற்சி களையும், சாதிய மத நல்லிணக்கத்தை சிதைப்பதற்காக ஐம்பது ஆண்டு களுக்கு முன்பாக துவங்கி இன்றள வும் செயல்பட்டு வரும் தீய சக்திகளை யும், அதன் காரணமாக 42 ஆண்டுகளுக்கு முன்பு 1982-ஆம் ஆண்டில் நடை பெற்ற தமிழகத்தை உலுக்கிய கலவர நிகழ்வுகள், உயிரிழப்புகள், மக்களி டையே தோன்றிய பிளவுகள் அனைத்தை யும் எண்ணற்ற தகவல்களுடன் விளக்கியுள்ளார் கன்னியாகுமரி மாவட் டம் மணவாளக்குறிச்சி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் என். முரு கேசன் அவர்கள், தான் எழுதிய மண்டைக் காட்டம்மன் வரலாறும் வர்ணாசிரம ஆக்கிரமிப்பும் எனும் நூலின் மூலம். இந்நூல் காலத்தின் தேவையாக உள்ள ஓர் ஆவணமாகும்.
மோதிக் கொண்டிருந்த மக்களை அமைதிப்படுத்த இடதுசாரி இயக்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடதுசாரி உறுப்பினர் களின் நிர்ப்பந்தங்கள், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் நிலைபாடுகள் அனைத்தையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. வேணுகோபால் கமிஷனின் பரிந்துரைகள் குறித்தும் சுட்டிக்காட்டு கிறது.
வெறுப்பு அரசியலிலிருந்து மக்களை விடு விக்க, தொன்மையான வரலாறுகளைக் கற்றுக் கொள்ள, உரை யாடல்களைத் துவங்க வேண்டும் என நூலாசிரியர் அறைகூவி அழைக்கிறார்.
திருத்தமான இலக்கிய அழகிற்குப் பதில் தனது எளிமையான இயல்பான மொழி நடையில், சாமான்ய மக்க ளின் உணர்வின் பிரதிபலிப்பாக முதற்பகு தியும், வரலாற்றின் முக்கிய நிகழ்வுப் பதிவுகளாக பிற்பகுதியையும் கொண்டு இந்நூலைப் படைத்துள்ளார்.
பால பிரஜாபதி அடிகளாரின் வாழ்த்து செய்தியும், சாகித்ய அகாடமி விருதா ளர் பொன்னீலனின் அணிந்துரையும் இந்நூலுக்கு மேன்மை சேர்க்கின்றன. பாரதியின் பொருத்தமான கவிதை யும், சுவாமி விவேகானந்தரின் கருத்துக் களும் மேலும் சிறப்புச் சேர்க்கின்றன.
அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்று மையையும் பாதுகாக்க விரும்புவோரும் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு நூல்.
மண்டைக் காட்டு அம்மன் வரலாறும் வர்ணாசிரம ஆக்கிரமிப்பும்
என்.முருகேசன்
வெளியீடு : பிரிண்ட் பாய்ண்ட், நாகர்கோவில்,
பக்கம் : 60/ விலை ரூ.50
தொடர்புக்கு : 93675 21424