tamilnadu

ஹெல்மெட் விவகாரம்: ஓட்டுநர் உரிமம் ரத்தாகுமா?

சென்னை, ஜூன் 6-ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுகிறதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் படி நான்கு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும் அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை எனக் கூறி பொது நல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு வியாழனன்று (ஜூன் 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிக்கும் ஒருவர்கூட ஹெல்மெட் அணிவதில்லை எனக் கூறிய நீதிபதிகள், தில்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் இந்த சட்டத்தை அமல்படுத்தும் போது ஏன் தமிழகத்தில் முடியவில்லை என கேள்வி எழுப்பினர்.இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு உரிய முறையில் அமல்படுத்துவதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த 6 மாதங்களில் ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதி மணிக் குமார், ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய சட்டத்தில் இடமில்லை எனக் கூறிய நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், ஓட்டுநர் உரிமங்களை சஸ்பெண்ட் வேண்டுமானால் செய்ய முடியும் ரத்து செய்ய முடியாது என்றார்.மேலும் ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மோட்டார் வாகன சட்ட விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதாக அரசு வழக்கறிஞர் பதிலளித்தார்.அப்போது இடைமறித்த நீதிபதிகள் காவல்துறையினரும் ஹெல்மெட் அணிவதில்லை என்றும், அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பினர். ஹெல்மெட் அணியாத காவல்துறையினர் பணி இடை நீக்கம் செய்யப்படுவதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது.இதையடுத்து ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கி பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.