மிக்ஜம் புயல் பாதித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோருக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
‘மிக்ஜம்’ புயல் மற்றும் கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்ற சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு அரசு நிவாரணங் களை அளித்து வருவதை வரவேற்கின்றோம்.
கனமழையின் காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடு களை கருத்தில் கொண்டு, 04.12.2023 முதல் 7.12.2023க்குள் மின்கட்டணம் செலுத்துவதை கடைசி நாளாகக் கொண்டவர்களுக்கு அவகாசம் அளிக்கப் பட்டு, அவர்கள், 18.12.2023 வரை அபராதமின்றி மின்கட்ட ணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனினும், குறிப்பிட்ட ஒரு பகுதி மின் நுகர்வோர்களே இதனால் பயன்பெற முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் பயன்பெறும் வகையில் அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 30.12.2023 வரை நீட்டிக்க வேண்டும் எனவும், இது சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.