tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

இன்றைய வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள நோப்பரா கிராமத்தில் 1894 மார்ச் 22இல் சூர்யா சென் பிறந்தார். பெர்ஹாம்பூர் கல்லூரியில் பி.ஏ. பட்டம்  பயிலும் போதே 1918ஆம் ஆண்டு ‘யுகாந்தர்’ புரட்சிகர இளைஞர் இயக்கத்தை  உருவாக்கி னார். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பணிபுரிய விரும்பாத அவர் ஆங்கிலக் கல்வி முறைக்கு  மாற்றாகத் தேசப்பற்றை அடிப்படையாகக் கொண்ட தேசியக் கல்வி அளிக்கும் பள்ளியை உருவாக்கி ஆசிரியராக பணியாற்றினார்.

 பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய கொரில்லாப் போர் முறையே உகந்தது என்ற முடிவுக்கு வந்த அவர் புரட்சிகர ஆயுத போராட்டம் மூலமே இந்திய விடுதலையை கொண்டு வர இயலும் என்ற முடிவுக்கு வந்தார். இந்திய தேசிய காங்கிரசின் சிட்டகாங் மாவட்ட தலைவராக செயல்பட்ட  போது காந்தியடிகள் அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தை சிட்டகாங்கில் தலைமையேற்று நடத்தினார். சிட்டகாங்கை தளமாகக் கொண்டு செயல்பட்ட சூர்யாசென்னின் புரட்சிப் படை  அங்கிருந்த பிரிட்டிஷ்  ஆயுதக் கிடங்கு ஒன்றை கைப்பற்றி நகரை  சுதந்திர நகராகப் பிரகடனப்படுத்த திட்டமிட்டது. இதனை தொடர்ந்து சூர்யா சென்னின் புரட்சி படைக்கும் பிரிட்டிஷ் படைக்கும் இடையே மோதல் நடந்தது. அவர்களிடம் பிடிபடாமல் தப்பி தலைமறைவானார்.

பின்னர் துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைதாகி சிட்டகாங் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1934 ஜனவரி 12 ஆம் நாள் சூர்யா சென்னும், அவரது புரட்சி குழுவை சேர்ந்த தாரகேஸ்வர் தஸ்தகீரும் தூக்கிலிடப்பட்டனர். “மரணம் என் வாழ்க்கையின் வாசல் கதவைத் தட்டுவது என் காதில் கேட்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கி மெல்லப் பறக்கத் தொடங்கிவிட்டது. விழி மூடும் இந்த மரணப் பொழுதில் என் நண்பர்களிடம் நான் ஒன்றை மட்டும் என் நினைவாக விட்டுச் செல்கிறேன். அதுதான் ‘சுதந்திர இந்தியா’ என்ற என் பொற்கனவு. தோழர்களே! இந்தக் கனவை நனவாக்க நம் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள். எந்த நிலையிலும் ஓரடிகூடப் பின்வாங்க முயல வேண்டாம்.

நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசுவதைக் காணுங்கள். எல்லோரும் எழுங்கள், அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்து சேரும்” இது தூக்கிலிடப்படும் முன் சூர்யா சென் எழுதிய கடிதத்தின் மூலம் விடுத்த அறைகூவல் ஆகும்.