tamilnadu

img

குட்கா: உரிமை மீறல் நோட்டீஸ் மீதான தடையை நீக்க மேல்முறையீடு

சென்னை:
சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸூக்கு இடைக்காலத் தடை விதித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய 2வது நோட்டிஸூக்கு இடைக்காலத் தடை விதித்த உத்தரவைநீக்க கோரி உரிமை குழு தலைவர், பேரவைச் செயலாளர் சார்பில் மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளது.தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப் பேரவை உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸில் அடிப்படைத் தவறுகள் உள்ளன. இந்த நோட்டீஸின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம் என உத்தரவிட்டிருந்தது.இதனையடுத்து உரிமை மீறல் குழு கடந்த செப். 7-ஆம் தேதி திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் கடந்த வாரம் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமைமீறல் குழு அனுப்பிய நோட்டீஸூக்கு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை விதித்தார்.மேலும் இதுதொடர்பாக பேரவைத் தலைவர், பேரவைச் செயலாளர், உரிமை மீறல் குழுவின் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். உரிமைமீறல் குழு அனுப்பிய இரண்டாவது நோட்டீஸூக்கு இடைக்காலத் தடை விதித் ததை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் திங்களன்று  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.