மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த கோரிக்கை
குடியாத்தம்,ஆக.28- குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அரசு அறிவித்தது. வேலூர் மாவட்டமாக இருந்தபோது வேலூரில் மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் கொண்டுவரப்பட்டது. அதனால், வேலூரில் செயல்பட்டு வந்த மாவட்ட தலைiமை மருத்துவமனையை குடியாத்தம் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். பல்வேறு காரணங்களால் அந்த மருத்துவமனை வாலாஜாவுக்கு மாற்றப்பட்டது. தற்போது, மாவட்டம் பிரிக்கப்பட்டத்தில் வாலாஜா ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் வருகிறது. எனவே, மீண்டும் மாவட்ட மருத்துவமனை துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வேலூருக்கு அடுத்ததாக அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் குடியாத்தம். குடியாத்தம் பகுதியில் கைத்தறி, நெசவாளர்கள், பீடித் தொழிலாளர்கள், தீப்பெட்டி, கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஏராளமாக வசிக்கிறார்கள். கே.வி. குப்பம், வளத்தூர், பள்ளிகொண்டா போன்ற பகுதிகளும் குடியாத்தத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. குடியாத்தம் நகரம், பேரணம்பாட்டு நகரம், பரதராமி போன்ற பகுதிகளும் குடியாத்தம் தொகுதிக்குள் வருகிறது. அத்துடன் குடியாத்தம் அரசு மருத்துவமனை 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பழமையான மருத்துவமனையாகும். எனவே, இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பி. காத்தவராயன் கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்துடன் சிறைத்துறை தலைவர் ஆய்வு
வேலூர், ஆக.28- வேலூர் மாவட்ட முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு முன்னாள் சிறை வாசிகள் ஆதரவு சங்க மாநிலத் தலைவர் மற்றும் சிறைத்துறை தலைவர் ஆபாஷ்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் மற்றும் சிறைத்துறை தலைவர் ஆபாஷ்குமார் அவர்களால் ஆய்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் சிறைத்துறை மண்டல நன்நடத்தை அலுவலர் அ.சாய்தாபேகம், நன்னடத்தை அலுவலர் ஆர்.சரவணன், செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.நரசிம்மன், ஆப்கா நிறுவனத்தின் ஆராய்சி அலுவலர் அன்சர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், சிறைமீண்டோருக்கு செய்யப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மாநில அளவில் வேலூர் மாவட்ட கிளை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.