tamilnadu

img

தோட்ட தொழிலை துவக்குவதற்கான ஆணைகளை அரசு திரும்ப பெற வேண்டும் - சிஐடியு

கொரோனா பாதிப்பு மற்றும்  தமிழகத்தில் அத்தியாவசிய முக்கிய பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது மற்றும் பாதுகாப்பு குறித்து இந்திய தொழிற்சங்க மையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. சிஐடியு பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது
     நாடு முழுவதும் கொரோனா கிருமி தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாத்திடும் வகையில் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவருவது பாராட்டுதலுக்குரியதாகும். அதே வேலையில் மக்களின் அத்தியாவசிய அன்றாட தேவைகைளை பூர்த்தி செய்திட தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதோடு தமிழக தொழிலாளர்கள் அதிகாரிகள் பல்வேறு பணிகளை போர் கால அடிப்படையில் செய்து வருகின்றனர். 
அத்தியாவசிய பணிகளான  மின்சார விநியோகம் , பராமரிப்பு, உள்ளாட்சி துப்புரவு பணிகள், பால் விநியோகம், மருந்து மற்றும் இதர சேவைகளை செய்திட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் பணிக்கு வர மற்றும் வீடு திரும்ப போக்குவரத்து மற்றும் உணவு ஏற்பாடுகளை அரசு உத்திரவாதபடுத்த வேண்டும். 
வல்லூர் மின் நிலையத்திற்கு பணிக்கு செல்லும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு  காவல்துறையின்  கெடுபிடிகளை சமாளித்து பணிக்கு செல்ல அடையாள அட்டை வழங்க வேண்டும்.  
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு கனிம நிறுவனம் தனது  ஊழியர்களை குறிப்பாக சுரங்க தொழிலாளர்கள் வேலைக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. சுரங்க பணிகளில் தொழிலாளர்கள் மட்டுமல்ல  ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளும் ஈடுபட்டால் தான் பணிகள் முழுமையாக நடைபெறும் நிலை உள்ளது.  மத்திய அரசு  நிலக்கரி சுரங்க தொழில் மட்டுமே அத்தியாவசிய தொழிலாக தற்போது அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கனிம தொழிலை அத்தியாவசிய தொழிலாக கருதாமல் அவற்றிக்கு விதிவிலக்கு அளித்து தொழிலாளர்களை வேலைக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் என சிஐடியு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. 
 அதே போன்று நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலும் அத்தியாவசிய தொழில் என்று அரசு அறிவித்துள்ளது. தோட்டங்களில் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று முதலாளிகள் வற்புறுத்துகின்றனர். அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்திரவிற்கு எதிரானதாகும். ஆகவே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
நகர் புறங்கள் மற்றும் கிராம புறங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் அதே நேரத்தில் பல மாவட்டங்களில் தொழிலாளர்களுக்கு சாதாரண சூழ்நிலையில் வாங்கும் ஊதியத்தை விட குறைத்து தருவதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.
மேலும் கொரோனா பாதிப்பு பற்றியான விழிப்புணர்வு மற்றும் பல்வேறு பணிகளை செய்திட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம நல ஊழியர்களை பணிக்கு வர வேண்டும் என அறிவித்துள்ளது. அந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கொரோனாவை எதிர்கொள்ள மனிதகுலத்தை மீட்க ஊரடங்கு,சமூக தனிமைப்படுத்துதல் போன்ற மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து தமிழக மக்களை பாதுகாக்கும் அரசு தற்போது அத்தியாவசியமில்லாத தொழில்களை அத்தியாவசிய தொழில் என்று அறிவித்து தொழிலாளர்களை வேலைக்கு வர சொல்லுவதை கைவிட வேண்டும்  இதனால் மக்களை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிகள் அதன் நோக்கம் வீண்போகும் நிலை ஏற்படும் என்று சிஐடியு கவலை கொள்கிறது.  
ஆகவே  தமிழக அரசு உடனடியாக  தமிழக டாமின் மற்றும் நீலகிரி தேயிலை தோட்ட தொழிலை துவக்க அனுப்பபட்ட ஆணைகளை திரும்ப பெற வேண்டும் என சிஐடியு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.