சென்னை, பிப். 12 - அரசு தயாரித்தளித்த உரையை வாசிக்க மறுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, அடாவடியாக நடந்து கொண்டார். மேலும், தேசியகீதம் இசைக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் முறைப்படி முடி வதற்கு முன்னதாகவே சட்டமன்றத்தி லிருந்து ஓட்டம் பிடித்தார்.
2024-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 12 அன்று துவங்கும்; 2024-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளு நர் ஆர்.என். ரவி உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திங்களன்று (பிப்.12) காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடி யது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின், ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றத் துவங்கினார். அரசு தயாரித்து வழங்கும் உரையே ஆளுநரின் உரை என்ற நிலை யில், அதனை அப்படியே வாசிப்பது தான் ஆளுநரின் பணியாகும்.
உரையை வாசிக்க மறுத்த ஆளுநர் ரவி
ஆனால், அரசு தயாரித்தளித்த உரையை முழுவதுமாக வாசிக்க மறுத்து ஆளுநர் ரவி, வேகவேகமாக சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையின் முதல் பக்கத்தில் வணக்கம் என்று உள்ளதைக் குறிப்பிட்டு உரை யைத் துவங்கிய ஆளுநர், “சட்டப்பேர வை கூட்டத்தொடர் தொடக்க உரை யை இந்த அவையில் நிகழ்த்துவது எனக்குக் கிடைத்த கவுரவமாக எடுத்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ‘எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கட்டும்.
சொந்தக் கருத்தைக் கூறி சலசலப்பு ஏற்படுத்த முயற்சி
தமிழ்நாட்டின் வளர்ச்சி, இந்த அரசின் நோக்கங்கள் குறித்து, காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு எனது உரை யைத் தொடங்குகிறேன். ‘பிணி யின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து..’ மக்க ளுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு” என்று கூறி விட்டு, திடீரென தனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றையும் ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.
சட்டமன்றக் கட்சிகள் எதிர்ப்பு
அப்போது, ஆளும் கட்சி உறுப்பினர்களும், முன்வரிசை தலை வர்களும் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேர வையில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, “வாழ்க பாரதம், ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் நன்றி” என்று கூறி 3 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார். அதேநேரம் உரையைப் புறக்கணித்து வெளியேறாமல் அவை யிலேயே அமர்ந்திருந்தார்.
பொறுக்க முடியாமல் அவையிலிருந்து ஓட்டம்
அதைத்தொடர்ந்து, ஆளுநர் வாசிக்காத முழு உரையையும் பேரவைத் தலைவர் மு. அப்பாவு முழுமையாக வாசித்தார். பேரவைத் தலைவர் உரையை வாசித்து முடிக்கும் வரை, ஆளுநர் ரவி இறுக்கத்துடனேயே இருந்தார். இறுதி யாக சொந்தக் கருத்தாக ஆளுநர் தெரி வித்த விஷயங்களுக்கு அவையின் தலைவர் என்ற வகையில் சபாநாயகர் மு. அப்பாவு சில விளக்கங்களை அளித்தார்.
ஆனால், அந்த பதிலை முழுமை யாக கேட்காமலும், அவை மரபுகளை மதிக்காமலும், தேசிய கீதம் இசைக்கப் பட்டு அவை நிகழ்ச்சிகள் முறையாக முடிக்கப்படுவதற்கு முன்னதாகவும் ஆளு நர் ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
குரல் வாக்கெடுப்பு மூலம் உரையை நிறைவேற்றிய அரசு
இதற்கிடையிலேயே ஆளுநர் பேசிய சொந்தக் கருத்துக்கள் அனைத்தையும், அவைக்குறிப்பிலிருந்து நீக்க அவை முன்னவர் துரைமுருகன், பேரவை விதி 17-ஐ தளர்த்தி தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த வாரம், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானும், இதேபோல அரசு தயாரித்து அளித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அவையிலிருந்து வெளியேறி னார். தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியும், அதே வழியைக் கடைப் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் ஆளுநர் ஒருவர், உரையை முழுமையாக வாசிக்காமல் சென்றது இதுவே முதன் முறை என்று கூறப்படுகிறது.
கடந்தாண்டு அம்பேத்கர், பெரியார் பெயரைக் கூற மறுத்து அடாவடி
கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போதும், ஆளுநர் உரையில் இருந்த அம்பேத்கர், அண்ணா, பெரியார், காம ராஜர் பெயரை வாசிக்க மறுத்த ஆளுநர், சமூக நீதி போன்ற வார்த்தைகளையும் தவிர்த்தார். மேலும், பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே வெளிநடப்பு செய்தார். தற்போது உரை யை முழுமையாக வாசிக்க மறுத்து அடா வடியாக நடந்து கொண்டுள்ளார்.
இந்தாண்டு தேசிய கீதத்தை காரணமாக்கி சமாளிப்பு
தமிழ்நாட்டில் எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளிலும், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், கூட்டம் முடியும் போது தேசியகீதமும் ஒலிக்கப்படுவது தான் மரபு. ஆனால், சட்டமன்றத்தில் தான் பேசுவதற்கு முன்பும், பின்புமாக இரண்டு முறை தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூறியதாகவும், அதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றும்- முழு உரையையும் வாசிக்கா மல் புறக்கணித்ததற்கு இதுவே காரணம் என்றும் உப்புக்குச் சப்பில்லாத ஒரு காரணத்தை ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
வழக்கம்போல வாயை மூடிக்கொண்ட அதிமுக
ஆளுநரின் இந்த செயலுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வழக்கம்போல இப்போதும் ஆளுநருக்கு எதிராக மறந்தும் வாய் திறக்கவில்லை. எதிர்க்கட்சி என்ற வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. மறுபுறம் பாஜக வழக்கம்போல ஆளுநரின் அடாவடியை நியாயப்படுத்தியுள்ளது.
கருப்பு உடையணிந்து அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
முன்னதாக, தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ரவிக்கு, தங்க ளின் கண்டனத்தைத் தெரிவிக்கும் வித மாக, சட்டப்பேரவைக் கூட்டத்தின் துவக்கத்திலேயே காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உறுப்பினர்கள் கருப்பு அட்டை அணிந்தும், விசிக உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி கருப்பு உடை அணிந்தும் சட்டமன்றத்திற்கு வந்திருந்தனர்.