திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது: "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் ‘காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என அறிவித்திருந்தார்.
அதனை செயல்படுத்தும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான நிர்வாக அனுமதியை முதலமைச்சர் அரசாணையின் மூலம் வழங்கியுள்ளார்.
திருச்சி மாவட்ட மக்களின் சார்பாகவும், டெல்டா மாவட்ட இளைஞர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் சார்பாகவும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.