சென்னை:
நீதிமன்ற உத்தரவை மீறி முழு கல்வி கட்டணத்தை வசூலித்துள்ளதாக 108 பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளன.நீதிமன்ற உத்தரவை மீறி முழு கல்விக் கட்டணத்தைசெலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்த புகாரைபெறுவதற்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மின்னஞ்சல் முகவரியை ஏற்படுத்தமெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தி யிருந்தது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனியே மின்னஞ்சல் முகவரி கல்வித்துறை அதிகாரிகளால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நீதிமன்றம் முதல் தவணைத் தொகையை மட்டுமே பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெற அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் சில பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தை வசூலித்திருப்பதாக அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் 108 பள்ளிகள் மீது இதுபோன்ற புகார் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து, முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் பள்ளிகளுக்கு நோட்டீஸ் வழங்குவார்கள். அதற்கு அந்த பள்ளிகள் அளிக்கும் விளக்கத்தையும், நோட்டீசையும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககத்துக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.