புயல் பாதிப்பு பகுதிகளில் புதைவட மின் கம்பிகள்
செய்யூர் தொகுதிக்குட்பட்ட 16-க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராமங்களில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரிசெய்ய புதைவட கம்பிகள் அமைக்கப்படுமா? என திமுக உறுப்பினர் ஆர்.டி.அரசு கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி, அதிகமாகக் காற்று வீசக்கூடிய, புயலால் பாதிப்புக்குள்ளாகும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீனவக் கிராமங்களில் கடல் காற்று மற்றும் வெயிலின் காரணமாக இன்சுலேட்டர் வெடித்து விடுவதால் மின் விநியோகம் தடைப்படுகின்றது. இதற்குத் தீர்வுகாணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
புதிய வட்டங்கள் உருவாக்கப்படுமா?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை இரண்டாக பிரித்து புதிய வட்டம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என அதிமுக உறுப்பினர் சேகர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், “ஒரு வட்டத்தை அல்லது ஊராட்சி ஒன்றியத்தைப் பிரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து கட்சி மாவட்டச் செயலாளர்கள், குடி யிருப்போர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் எடுக்கும் முடிவுகள் அரசுக்கு அனுப்ப வேண்டும். அது விதிமுறைகளுக்குட்பட்டிருந்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
சுங்கடிச் சேலை சாயமிடும் தொழிற்சாலை
திண்டுக்கல் மாவட்டம், சின்னாலம்பட்டியில் குடிசைத் தொழிலாக தாயரிக்கப்படும் சுங்கடிச் சேலை தாயரிப்பு பணிக்குச் சாயமிடும் தொழிற்சாலை அமைக்கப்படுமா? என ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக உறுப்பினர் அ.சக்கரபாணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கைத்தறித்துறை அமைச்சர் ஒ.எஸ்.மணியன்,“ போதுமான இடம் கிடைக்கும் பட்சத்தில் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று சாயத்தொழிற்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.