tamilnadu

img

ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்கள் முடக்கம்!  

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற நிறுவனம், ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால், மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக தருவதாக விளம்பரம் செய்தது.

ஆனால், இதில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரின் பேரில், கடந்த மே மாதம் 24 ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய தமிழ்நாடு முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது.

இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.3.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 11 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் 14 பேர் மீதும், ஆருத்ரா பெயரில் செயல்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  

ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநரான பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.  

இந்நிலையில், ஆருத்ராவின் 100 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், மேலும் 70 வங்கி கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்  முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.