tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள்

செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையர் மலை வட்டம்,மூவரசம்பட்டில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள், சீருடைகள், புத்தகப்பை, எழுது பொருள்கள் ஆகியவற்றை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் காமாட்சி, அரவிந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்உதயகுமார் பலர் கலந்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராமில் கத்தியுடன்  ரீல்ஸ் போட்ட ரவுடிகள் கைது

சென்னை, ஜூன் 2-  பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சிலர் கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, புளியந்தோப்பு சுந்தரபுரம் 4வது தெருவில் வைத்து போலீசார் 3 பேரை மடக்கிப் பிடித்தனர். இவர்களிடமிருந்து 2 அடி நீள கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், புளியந்தோப்பு சுந்தரபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (23), ராகுல்ராஜ் (22), மதன்ராஜ் (38) என்பதும், இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மற்றொரு சம்பவம்: ஓட்டேரி தாசமகான் சுபேதார் தெருவில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த இப்ராஹிம் (எ) சமீர் (24), சூரப்பட்டு சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த முகமது குல்பான் (27)ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 47 பாக்கெட் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

சென்னையில் இன்று மின்தடை

சென்னை, ஜூன் 2- சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் செவ்வாய்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், செவ்வாயன்று  மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பூந்தமல்லி டிரன்க் ரோடு, ஆஞ்சிநேயர் கோவில் தெரு, வைத்தீஸ்வரன் கோவில் தெரு, ராமானுஜகூடம் தெரு, சுந்தர் நகர், புது தெரு, கங்கா சாரதி நகர், பிள்ளையார் கோவில் தெரு, சுற்றியுள்ள பகுதிகள். போரூர்  திருமுடிவாக்கம் ஒரு பகுதி, இந்திரா நகர், குரு நகர், விவேகானந்தா நகர், பலம்தண்டலம், நாகன் தெரு, கிரசர் பகுதி, கிஷ்கிந்தா சாலை, ராஜீவ் நகர். பெருங்களத்தூர் சத்தியமூர்த்தி தெரு, திருப்பூர்குமரன் தெரு, கஸ்தூரிபாய் தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், மீனாட்சி அவென்யூ, கண்ணன் அவென்யூ, வசந்தம் அவென்யூ, விஷ்ணு நகர், ஈபி காலனி ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமானார்

சென்னை, ஜூன் 2 - போக்குவரத்து அரங்க தமுஎகச செயலாளர் மற்றும் விபிசி கலைக்குழு பாடகருமான கே.சிவஞானத்தின் இணையர் விஜயலட்சுமி திங்களன்று (ஜூன் 2) காலமானார். அவருக்கு வயது 54. குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், ச.லெனின், சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், தமுஎகச மாவட்டத் தலை வர் சி.எம்.குமார், செயலாளர் அசோக்சிங், பொருளாளர் சரத், மாவட்டச் செயலாளர்கள் தீ.சந்துரு (வாலிபர் சங்கம்), எஸ்.ஆனந்தகுமார் (மாணவர் சங்கம்) உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது இறுதி நிகழ்ச்சி, அஸ்தினாபுரம் மயானத்தில் நடைபெற்றது.

அரும்பாக்கம் மயானம் மூடல்: ஜூன் 12 வரை மாற்று ஏற்பாடு

 சென்னை, ஜூன் 2 - சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், 103வது வார்டில் உள்ள அரும்பாக்கம் இந்து மயான பூமியில், மின்மயான தகன மேடை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே, ஜூன் 3 முதல் 12ந் தேதி வரை மயான பூமி இயங்காது. எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள வில்லிவாக்கம் அல்லது வேலங்காடு மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

தங்கம் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து

சென்னை, ஜூன் 2-  சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1120 உயர்ந்தது. காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.880 உயர்ந்தது.  தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மே மாதத்தில் 89.09 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம்

சென்னை, ஜூன் 2- சென்னை மெட்ரோ ரயிலில் 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் 89,09,724 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பய ணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு  பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் - (+91 83000 86000), பேடிஎம் , போன் பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.