சென்னை:
அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக வங்கிப் பணிகளில் எஸ்சி,எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டு இடங்கள் மோசடியாக பறிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்து,மத்திய அரசு சட்டம் இயற்றியபோது, இதனால் ஏற்கனவே அமலில் உள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் நலன்கள் பாதிக்கபடாது என தெரிவித்தது. பொதுப் பிரிவில்இருந்தே, பொருளாதாரத்தில் நலிந்த இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம், பயிற்சி அதிகாரிகளை தேர்வு செய்ய வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் இருந்து 10 சதவீத இடங்களை மோசடியாக குறைத்து அவற்றை பொதுப்பிரிவிலும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவிற்கும் மாற்றியுள்ளது.
பொதுப் பிரிவு இடங்கள் 50 சதவீதம், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம், பட்டியலினம், பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 40 சதவீதம் என்ற அளவில் இட ஒதுக்கீடு அறிவிப்பில் உள்ளது. அதாவது பட்டியலின இட ஒதுக்கீடு 15 சதவீதம்என்பதற்கு பதிலாக 13 சதவீதமாககுறைக்கப்பட்டுள்ளது, பழங்குடியினர் ஒதுக்கீடு 7.5 சதவீதம் என்பது 6 சதவீதமாகவும், இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 சதவீதம் வழங்கவேண்டிய இட ஒதுக்கீட்டை வெட்டி 21 சதவீதமாக பறித்துள்ளனர்.இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செய்யப்பட்டிருக்கும் மோசடியும், சமூகநீதியின் முக்கிய அங்கமாக உள்ள இட ஒதுக்கீட்டின் மீதான தாக்குதலுமாகும். இந்த அறிவிப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெறச் செய்வதுடன், இந்த அறிவிப்பைச் செய்திருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.