tamilnadu

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைவு! - சிபிஎம் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் எஸ். ராஜசேகரன் மறைவுக்கு சிபிஐ(எம்) இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்களில் ஒருவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் எஸ். ராஜசேகரன் (82) உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் எஸ். ராஜசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திலும், புதுக்கோட்டை மாவட்டம் பிரிந்த பிறகும்  விவசாயிகள், தொழிலாளர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். இரண்டு முறை புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும், 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஆலங்குடி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் மக்களால் தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறந்த மக்கள் பிரதிநிதியாக பணியாற்றியவர். 2013 ஆம் ஆண்டு முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பல ஆண்டுகாலம் பணியாற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவும் மிகச்சிறந்த முறையில் அரும்பாடுபட்டவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைப்பாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அன்னாரது இணையருக்கும், குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு ஆழ்ந்த வருத்தத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது."

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.