சென்னை:
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல் நலக்குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 87.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் டி.எஸ். நாராயணய்யர், சீதாலட்சுமிக்கு மகனாகப் பிறந்தவர் டி.என். சேஷன். இவர் கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறைஇயக்குநர், வேளாண், தொழில் துறைச் செயலர் என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார்.
பிறகு, இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது இவர் எடுத்த பல நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளானது. டி.என்.சேஷன் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப்பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக 1990ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.பணி ஓய்வுக்கு பிறகு சென்னையில் வசித்து வந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில் முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்.
முதல்வர் இரங்கல்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“ முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர், டி.என். சேஷன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.