சென்னை:
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருநங்கை, திருநம்பி ஆகிய மூன்றாம் பாலினத்தவர்களுக்கென தனிப் பிரிவு ஒன்றை உருவாக்கி, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அமைந்த கரையைச் சேர்ந்த கிரேஸ் பானு என்ற திருநங்கை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் (அக்.5) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இவ் வழக்கில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மூன்றாம் பாலினத்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்குவதாகத் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து, குறிப்பிட்ட மூன்றாம் பாலினத்தவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், அவருக்கு பல சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், திருநங்கைகள் நலவாரியத்தில் அரசுத் துறையினர் மட்டுமே இடம் பெற்றுள்ளதாகவும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.இதைக் கேட்டறிந்த நீதிபதிகள், வரும் அக்டோபர் 29 ஆம் தேதிக்குள் இது குறித்து பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தனர்.