சென்னை, ஜூலை 9- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 9 அன்று துவங்கியது. பொதுப் பிரிவு கலந்தாய்வில் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களும் சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 4820 எம்.பி.பி.எஸ் மற்றும் 1223 பி.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் 57 ஆயிரத்து 4 மாணவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் செவ்வாயன்று பொது பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு துவங்கியது.இதில் நீட் தேர்வில் 685 முதல் 517 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். பத்து பேருமே சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை தேர்வு செய்தனர்.
இரு மாநிலத்தில் விண்ணப்பித்தால் தகுதி நீக்கம்
இதனிடையே ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த 218 பேர் சொந்த மாநிலங்களிலும் தமிழகத்திலும் விண்ணப்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு மாணவர் இரு மாநிலத்தில் விண்ணப்பித்தால் தகுதி இழந்துவிடுவார் என்றார்.