tamilnadu

img

சென்னையில் சர்வதேச கால்பந்து பயிற்சியாளருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

சென்னை, நவ. 27- சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஎம் மலர் மருத்துவமனையில்  கேமரூன் நாட்டைச் சேர்ந்த 54 வயதான முன்னாள் சர்வதேச கால்பந்தாட்ட வீரரும் பயிற்சியாளருமான  ரிச்சர்ட் டோவா என்பவருக்கு முழுமையான முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

கேரளா கால்பந்து கிளப்-ன் முன்னாள் பயிற்சியாளராகவும் ரிச்சர்ட் டோவா இந்தியாவில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கால்பந்து மைதானத்தில் இவரது மிகச்சிறப்பான திறன்களுக்காக அறியப்படும் ரிச்சர்ட் டோவா, முன்னாள் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராகவும் மற்றும் அதிகம் மதிக்கப்படும் கால்பந்தாட்ட பயிற்சி யாளராகவும் இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு கடுமையான முழங்கால் வலி யுடன் அடையார் மலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 அவரது முழங்காலில் உருக்குலைவு பிரச்சனையும் இருந்தது.இவருக்கு மூட்டு சீரழிவு முதிர்ச்சியடைந்த நிலை யிலிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  மருத்துவமனையின் எலும்பியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். நந்தகுமார் சுந்தரம் தலைமையிலான மருத்துவர்கள் குழு வலது முழங்கால் மாற்று அறுவைசிகிச்சையை இவருக்கு வெற்றிகரமாக செய்தது. தசைக் குருத்தெலும்பு கிழிசல்கள் போன்ற முழங்கால் காயங்கள் கால்பந்தாட்டத்தில் பொதுவாக ஏற்படு வதால் கால்பந்தாட்ட வீரர்கள் மிகவும் கவனமாக விளையாடவேண்டும் என்று டாக்டர் நந்தகுமார் கூறினார்.