சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமாக வும் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் மத்தியபாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கண்டித்தும் நாடு முழுவதும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நவம்பர் 5 அன்று விவசாயிகள் மறியல், ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட்டனர்.
இந்திய விவசாயிகளையும், விவசாயத்தையும் அடியோடு அழித்தொழிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு வேளாண் விரோத சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து பஞ்சாப்,ஹரியானா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பஞ்சாப், ராஜஸ்தான் அரசுகள் மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக புதிய சட்டங்களை இயற்றியுள்ளன.இதன்தொடர்ச்சியாக வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மின்சார திருத்த மசோதா 2020-ஐ கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் நாடு முழுவதும் நவம்பர் 5 அன்று போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மாவட்ட தலைநகர்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் : பெ.சண்முகம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடுவிவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி நவம்பர் 26-ஆம் தேதி தமிழகத்தில் 500 இடங்களில் சாலைமறியல் போராட்டம் நடைபெறு கிறது. இந்தச் சட்டத்தை திரும்பப்பெறு வதுதான் விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்க ஒரே வழி. இந்தச் சட்டத்தை தமிழக முதலமைச்சர் ஆதரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கர் மாநிலங்களில் கொண்டு வந்துள்ளது போல் தமிழகத்திலும் மாநில அளவில் வேளாண் சட்டங்களை கொண்டு வர வேண்டும்.இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில் தான் 16 வகையான காய்கறி, பழங்களை கொள்முதல் செய்வதற்கான சட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. இது விவசாயிகளை பாதுகாக்கக்கூடிய சட்டமாகும் .இதேபோல் தமிழகத்திலும் சட்டத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தமிழகத்தில் தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களைஎழுப்பினர். பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.