tamilnadu

வங்கக்கடலில் ‘ஃபானி’ புயல் சென்னைக்கு பாதிப்பில்லை

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, வெள்ளிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது புயலாக மாறி கடலோர பகுதிகளை தாக்க வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்கிடையே, இந்திய வானிலை மையம் சனிக்கிழமை (ஏப்.27) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இன்னும் 12 மணி நேரத்தில் பானி புயலாக மாறும் என தெரிவித்திருந்தது.இந்நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஃ பானி புயலாக மாறியது. இந்த புயல் சென்னையை நெருங்க வாய்ப்பு குறைவு என்றும், கரையை கடக்காது என்றும் தெரிகிறது. பானி புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற கூடும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் வட கிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

;