சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இந்த ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வெறும் 10 சதம் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆனால், இந்த ஆண்டிற்கான போனஸ் 2019- 2020 ஆண்டிற்கான வருவாயின் அடிப்படையில் வழங்க வேண்டிய போனஸ். கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான். எனவே, தமிழக அரசின் இந்த அறிவிப்பு கொரோனா தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) கண்டித்துள்ளது. மேலும், மின்வாரிய ஊழியர்களுக்கு ஏற்கனவே சரண்டர் விடுப்பு மற்றும் பஞ்சப்படி ஆகியவை மறுக்கப்பட்டுள்ளது.
மற்ற துறைகளுக்கு வழங்கியது போல இந்த நோய்த்தொற்று காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றி நோய்த்தொற்று ஏற்பட்டு மரணமடைந்த ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படவில்லை. இது மின் ஊழியர்கள் மத்தியில் கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது உள்ள மின் வாரிய தலைவர் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசாமல் தன்னிச்சையாக வெறும் 10 சதவீத போனசை வழங்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் ஒப்பந்த ஊழியர் நிலை குறித்தும் எதுவும் சொல்லப்படவில்லை.மின்சார வாரியத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் மரபான தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி தீர்வு கண்டு அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்ற சூழலை உருவாக்கி அதன்பின் போனஸ் அறிவிப்பு வெளியிடுவது என்பதை தற்போதைய மின் வாரிய தலைவர் கண்டுகொள்ளவில்லை.மின்வாரிய தலைவர், தொழிலாளர் விரோத தொழிற்சங்க விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை பலமுறை சுட்டிக்காட்டியும் தமிழக மின்துறை அமைச்சரும் அரசும் கவனத்தில் கொள்ளவில்லை.கடந்த நவம்பர் 4ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் பொறியாளர்கள் துணை மின் நிலையங்களை தனியாருக்கு பராமரிக்கவும் இயக்கவும் இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கக்கூடாது என்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டம் நடந்து கொண்டு இருக்கின்ற பொழுது திருப்பத்தூரில் 230 கிலோவாட் துணை மின் நிலையத்தை மீண்டும் ஒரு தனியாருக்கு விட முடிவெடுத்து உத்தரவை வெளியிட்டுள்ளார் மின் வாரிய தலைவர். மறுபுறம் மின்துறை அமைச்சர் அவர்களோ மின் வாரியத்தை தனியார் மயமாக்க மாட்டோம் என்று தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.எனவே தமிழக அரசும் மின்வாரிய நிர்வாகமும் தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி குறைந்தபட்சம் 20 சத போனசை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நவம்பர் 9 திங்களன்று அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பும், சென்னை தலைமையகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டங்களை சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்தியது.