எல்ஐசி நிறுவனத்தின் 5விழுக்காடு பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சனிக்கிழமையன்று (மார்ச் 5) எல்ஐசி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சென்னை பகுதி -1ன் செயலாளர் எஸ்.ரமேஷ்குமார், "ஒன்றிய அரசு அறிவிப்புக்கு பொதுமக்கள் ஆதரவளிக்கவில்லை. பங்குகளை வாங்க டிமேட் கணக்கு தொடங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை; பாலிசிதாரர்களில் 1.5% பேர் மட்டுமே வருமானவரி கணக்கை பாலிசிகளோடு இணைத்துள்ளனர். பங்குகளை வாங்க பாலிசிதாரர்களும் ஆர்வம்காட்டவில்லை. எனவே, ஒன்றிய அரசு பங்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்" என்றார்.
இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச பொருளாளர் கி.நடராஜன், ஏஐடியுசி தேசிய செயலாளர் வகிதா நிஜாம், வங்கி ஊழியர் சங்க தலைவர்கள் சி.எச்.வெங்கடாச்சலம், சி.பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.