tamilnadu

img

ஆட்குறைப்பு காரணமாக மின்பழுதை சரிசெய்யமுடியாமல் ஊழியர்கள் திணறல்!

ஆட்குறைப்பு காரணமாக மின்பழுதை  சரிசெய்யமுடியாமல் ஊழியர்கள் திணறல்!

திருவள்ளூர், ஜூன் 8- ஆட்குறைப்பு காரணமாக மின் தடையை சீரமைக்க முடியாமல் மின் வாரிய ஊழியர்கள் திணறிவருகின்றனர்.பொது மக்களுக்கு  உரிய நேரத்தில் சென்று மின் பழுதை சீரமைக்க  போதிய ஆட்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்டு, கீழ்முதலம்பேடு, கவரைப்பேட்டை, மேல்முதலம்பேடு,  அரியத்துறை, ஏ.என்.குப்பம், கவரைப்பேட்டை, பெருவாயல், தண்டலச்சேரி, பன்பாக்கம், எடப்பாளையம், கிளிக்கோடி, கொள்ளூர் உள்ளிட்டு 20 கும் மேற்பட்ட கிராமங்கள் கவரைப்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட எல்லையாக உள்ளது. கவரைப்பேட்டை துணை மின் நிலையம் எல்லைக்கு உட்பட்டு 4000 க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக மின் இணைப்புகள் உள்ளன. சுமார் 600 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார்கள் இயங்கி வருகிறது. 40 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் உயர் மின்னழுத்த சர்வீஸ்கள்,  செங்கல் சூளை தொழிலகங்கள் இயங்கி வருகிறது. இவற்றை எல்லாம் கவனிக்க,  பராமரிக்க கவரைப்பேட்டை துணை மின் நிலையத்தில், லைன்மேன்,  ஒயர்மேன், உதவியாளர்கள் என மொத்தம் 33 பேர் பணியில் இருந்தனர். இந்த எண்ணிக்கையை தற்பொழுது அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 100 மின்மாற்றிகள் இருக்கும் போது 33 பேர் பணியில் இருந்தனர். தற்போது 180 மின்மாற்றிகள் இருக்கும் போது வெறும் 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் பணியாற்றி வந்த மின்வாரிய ஊழியர்கள் பலர் பணி ஓய்வு பெற்று சென்றுள்ளனர். சிலர் பதவி உயர்வு பெற்றும் சென்றுள்ளனர். இதனால் கவரைப்பேட்டை துணை மின் நிலையத்தில் வெறும் 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஜூன் 7), திடீரென பெய்த பலத்த மழை மற்றும் காற்று வீசியது. இதில் அரியத்துறையில் ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அருகில் உள்ள மின் கம்பங்களும் சாலையில் விழுந்தது . இதனால் அப்பகுதியில் மின்சாரம் 3 நாட்களாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேல்முதலம்பேட்டில் விவசாய மின்மோட்டார்களுக்கு மின் இணைப்பு வரும் மின் கம்பங்களும் உடைந்துள்ளதால், விவசாயமும் பாதித்துள்ளது. இதனை சீரமைக்க போதிய ஊழியர்கள் இல்லாததால், கவரைப்பேட்டை துணை மின் நிலையத்தில் உள்ள ஊழியர்கள் திணறுகின்றனர்.  சிறு அளவில் காற்று, மழை வந்தாலும், எல்லா பகுதிகளிலும் மின்சார வாரியத்தின் ஊழியர்கள் சென்று களஆய்வு செய்வதில் கால தாமதம் ஏற்படுவதால்,  அப்பகுதி இருளில் மூழ்கிறது. இதனை சீரமைக்க அதிகாரிகளும், தமிழ்நாடு அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பகுதி மக்களும் வலியுறுத்தியுள்ளனர். - பெ.ரூபன்