சென்னை, பிப். 27 - பணி நிரந்தரம் செய்யக் கோரி செவ்வாயன்று (பிப்.27) சென்னையில் மின்வாரிய தலைமையகம் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின் வாரியத்தில் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களை அடையாளம் கண்டு ஒப்பந்தப்படி தினக்கூலியாக ரூ. 380 வாரியமே நேரடியாக வழங்க வேண்டும்; அரசாணை 950 (8.8.1990)-ன் படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணியாற்றுகிறவர்களையும், அனல், நீர் மின் நிலையம், பொது கட்டுமான வட்டங்களில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களையும் அடையாளங்கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நிரந்தரத் தன்மை வாய்ந்த பணியிடங்களில், 2 ஆண்டாண்டுகளில் 480 நாட்கள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் பணியாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வேலை பளு உள்ள இடங்களில் இ-டெண்டர் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், பழனிவேலு, ரவிக்குமார், பீர் முகமது ஷா, நிர்வாகிகள் விஜயலட்சுமி, ஸ்ரீதேவி, எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.