வடசென்னை மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடாதீர்!
எரிஉலை திட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பெ.சண்முகம் கோரிக்கை
மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் எரிஉலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வடசென்னை போராட்டத்தில் பெ.சண்முகம் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். வட சென்னை கொடுங்கையூரில் புதிதாக .அமைக்க உள்ள எரிஉலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தர்ணா போராட்டம் வியாழனன்று (மே 15) ஆர்.ஆர்.நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், மக்கள் வாழ்வதற்கான உரிமையை சட்டம் வழங்கியிருக்கிறது, ஆனால் இறப்பதற்கு உரிமை கிடையாது. ஆகையால்தான் தற்கொலை முயற்சி செய்தால் காவல்துறை உடனடியாக நம்மை கைது செய்யும். கருணை கொலை கூட அனுமதியில்லை. உடல்நலத்தோடு, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். கவுரமாக வாழ வேண்டும், சுயமரியாதையோடு வாழ வேண்டும், அப்படிப்பட்ட வாழ்க்கை தான் ஒரு நல்ல வாழ்க்கையாக இருக்க முடியும். அப்படி இல்லாமல் சாக்கடையில் புரளும் பன்றியைப் போல், தெருவில் சுற்றுகிற தெரு நாயை போல், கிடைப்பதை உண்டு, கிடைத்த இடத்தில் படுத்து உறங்குவது ஒரு கவுரமான வாழ்க்கையா என்பதை ஆட்சியாளர்களை நோக்கி கேட்கிறேன். சட்டம் நான் வாழ்வதற்கான உரிமையை வழங்கியிருக்கும் போது அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. இன்று உலகம் முழுவதும் உள்ள எல்லா பெரு நகரங்களில் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய பிரச்சனை இந்த குப்பைக் கழிவுகள்தான். மனிதர்கள் வாழும் இடத்தில் கட்டாயம் குப்பைகள் சேரும். ஆனால் அதை எப்படி மேலாண்மை செய்வது, மக்களின் உடல் நலன் பாதிக்காத வகையில் அந்த குப்பைக் கழிவுகளை எப்படி அப்புறப்படுத்துவது என்றுதான் ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டுமே தவிர மக்களை பாதிக்கக் கூடிய வகையில் அதில் இருந்து மறு சுழற்சி செய்கிறோம் அல்லது மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் என்ற பெயரில் ஒரு புதிய தொழில்நுட்பத்தை (எரிஉலை) கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் அமல்படுத்துவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் எரிவாயு சிலிண்டர் இணைப்பு என்று ஒரு விளம்பரம் செய்யப்படும். அதில் ஒரு பெண்மணி இருமிக் கொண்டே இருக்கும். விறகு அடுப்பை பயன்படுத்தினால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு நுரையீரல் நோய் ஏற்படும். எனவே அதில் இருந்து விடுபட்டு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். விறகு அடுப்பில் உணவு சமைத்தால் அதில் இருந்து வரும் புகையால் தாய்மார்களின் நுரையீரல் பாதிக்கப்பட்டு, சுவாசக் கோளாறு ஏற்பட்டு அவர் இறந்து விடுவார் என்றும், ஒரு டயரை எரித்தால் அதில் இருந்து வரும் புகை எப்படியெல்லாம் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றெல்லாம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது, விளம்பரம் செய்கிறது. அப்படி இருக்கும் போது தினசரி ஆயிரக்கணக்கான டன் குப்பைக் கழிவுகளை எரித்தால், மக்கள் குடியிருக்க முடியுமா, நல்ல காற்றை சுவாசிக்க முடியுமா, சுகாதாரமான வாழ்க்கை வாழ முடியுமா என்று கேள்வி எழுப்பினார். ஆயிரக்கணக்கான டன் குப்பைகளை எரித்து அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் புகை, சாம்பல் துகள்கள் மூலம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? ஏற்படாதா என்று மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை அரசுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் உள்ளது. அப்படி எதுவும் பாதிப்பு ஏற்படாது என்றால், ஏன் வடசென்னையை மட்டும் தேர்வு செய்கிறீர்கள். ஏனென்றால் இந்த பகுதியில்தான் ஏழை மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். ஏழை மக்களை பற்றி ஆட்சியாளர்களுக்கு கவலையில்லை என்பதினால்தான் இங்கு எரிஉலை திட்டத்தை அமல்படுத்த நினைக்கிறார்கள். மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் இப்படி ஒரு திட்டத்தை நிறைவேறுவதற்கு ஆட்சியாளர்களுக்கு அல்லது மாநகராட்சிக்கு துணிச்சல் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார். அதேநேரம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் என தரம் பிரித்து வழங்கினால், அந்தந்த குப்பைக் கழிவுகள் எங்கு எடுத்து செல்ல வேண்டுமோ, அங்கு எடுத்துச் சென்று முறைப்படுத்த வசதியாக இருக்கும். எனவே பொதுமக்களும் தனித்தனியாக பிரித்து வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை எப்படி கொண்டு செல்வது என்று மாநகராட்சி நிர்வாகம், குடியிருப்போர் சங்கங்களிடையே ஒரு கலந்துரையாடல் நடத்தி, அதன் மூலம் பிரச்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள் 120 கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளார்கள். அதில் கொடுங்கையூர் எரிஉலை திட்டமும் ஒன்று என்பதை இந்த பகுதி மக்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மின்சாரத்தை விட மக்களின் சுகாதாரம் மிகமிக முக்கியம். எனவே மக்கள் வசிக்காத, மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாற்று இடத்திற்கு இந்த குப்பைக் கழிவுகளை கொண்டு செல்வதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது என்று முடிவு செய்து 5,500 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்துகிறது. 5,500 ஏக்கர் நிலத்தை அரசால் கையகப்படுத்த முடியும் என்றால், குப்பைக் கழிவுகளை கொட்டுவதற்கு மக்கள் வசிக்காத பகுதியில் ஒரு 500 ஏக்கர் நிலத்தை கண்டுபிடித்து கையகப்படுத்த முடியாதா? சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், துகள்கள் வெளியேறாத வகையில் எப்படி திட்டத்தை அமல்படுத்த முடியும் என்பதை அரசு சிந்தித்து மக்கள் வசிக்காத பகுதிக்கு கொண்டு செல்ல அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாறாக திட்டமிட்டபடி இங்குதான் எரிஉலை திட்டத்தை செயல்படுத்துவோம் என்று ஆட்சியாளர்கள் முயற்சி செய்தால் அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக பொதுமக்களுடன் நின்று போராடும் என்றும் தெரிவித்தார். பெரம்பூர் பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.லோகநாதன், எஸ்.ராணி, மாமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், பா.விமலா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராஜ்குமார், டி.பாபு ஆகியோரும் பேசினர். முன்னதாக ஆர்.கே.நகர் பகுதிச் செயலாளர் வி.ரவிக்குமார் வரவேற்றார். பகுதிக்குழு உறுப்பினர் டி.சரவணன் நன்றி கூறினார். முன்னதாக எழில் நகரில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகத்தை மாநிலச் செயலாளர் சண்முகம் பார்வையிட்டு பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.