சென்னை:
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு பணிகளை படு தீவிரமாக செய்து வருகிறது திமுக.இணையவழி பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட திமுக தலைமை அடுத்தக்கட்டமாக தேர்தல் அறிக்கையில் அதீத கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் 8 பேருக்கு வாய்ப்பளித்து அது தொடர்பான விவரத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.அதில் டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், பேராசிரியர் ராமசாமி ஆகிய 8 பேர் இடம்பெற்றிருக் கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்த டி.ஆர்.பாலு, மக்களை சந்தித்து அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து தேவைக்கேற்ப தேர்தல் அறிக்கையை வடித்தெடுத்தார்.அதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மக்களை நேரில் சந்தித்து தொகுதி வாரியாக உள்ள நீண்டகால பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கேற்றார் போல் திமுக தேர்தல் அறிக்கை வடித்தெடுக்கப்பட உள்ளது. இதற்கான சுற்றுப்பயணத்தை டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.இதனிடையே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள 8 பேரில் 6 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.