tamilnadu

தருமபுரியில் ரூ.5.32 கோடி பறிமுதல்

தருமபுரி, ஏப்.6-தருமபுரியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.5.32 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேஷம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகனப்பிரியா தலைமையிலான குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டதில், உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றரூ.5.32 கோடி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, தனியார் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் முகமையைச் சேர்ந்த வாகனம் எனவும், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும்,  பணத்தைஎடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்த பாதுகாவலர் வசம் பாதுகாப்பு துப்பாக்கி இல்லை என்பதும், பணத்துடன் அவர்கள் எடுத்து வந்த ஆவணத்தில் ஒருநாள் முந்தைய தேதி (ஏப்.4) குறிப்பிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, வாகனத்தில் எடுத்து வந்த ரூ.5.32 கோடியை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அவற்றைகருவூலத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தில் வந்த தனியார் வங்கி ஊழியர்கள், உரியஆவணம் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.

;