சென்னை,ஆக.19- 14வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்கவும், கழகங்க ளுக்கு தேவையான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கவும் வலியுறுத்தி திங்களன்று (ஆக.19) தமிழகம் முழுவதும் போக்கு வரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தம் ஆக.31ந் தேதியோடு நிறைவடைகிறது. 2019 செப். 1 முதல் 14வது ஊதிய ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும். எனவே, உடனடியாக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் தமிழகம் முழுவதும் நிர்வாக இயக்குநர்கள், பொது மேலாளர்கள் உள்ளிட்டோரிடத்தில் மனு வழங்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக மாநகரப்போக்கு வரத்து கழக நிர்வாக இயக்கநர் கணேசனிடம் அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில், 30 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒவ்வொரு 5 ஆண்டு பணிகாலத்திற்கும் 5 விழுக்காடு ஊதிய உயர்வை சர்வீஸ் வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 67 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற கோரிகை விளக்க ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பி.பாலகிருஷ்ணன், சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச் செயலாளர் வி.தயானந்தம், நிர்வாகிகள் மோ கன்ஜி, கே.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பேசினர்.