tamilnadu

img

விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம்; சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

சென்னை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கி உள்ளது.

கடந்த 18ஆம் தேதி இரவு கீழ்ப்பாக்கம் பகுதியில் கஞ்சா மற்றும் பட்டாக்கத்தியுடன் பிடிபட்ட விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டபோது வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து ,இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவிட்டார். சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் சரவணன் விசாரணையைத் தொடங்கி உள்ளார். அவர் தலைமையிலான சிபிசிஐடி காவல்துறையினர் தலைமைச் செயலகக் காலனி காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினர். விக்னேஷ் கைது தொடர்பான ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். அடுத்தகட்டமாக விக்னேஷின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.