நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்ட உயர்வை திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
கொரோனா நோய்த் தொற்று மற்றும் பொதுமுடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதாரம் இழந்து சொல்லொனா துயரங்களுக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான கட்டணங்களை 10 மடங்கு முதல் 70 மடங்கு வரை உயர்த்தி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாகப்பிரிவினை, நில எல்லை தொடர்பான தகராறுகள், சட்டப்படி தேவையான ஆவணங்களை பெறுவதற்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
எனவே, நில அளவை மற்றும் ஆவணங்களுக்கான உயர்த்தியுள்ள அபரிமிதமான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.