தமிழக அரசின் உத்தேச மின்கட்டண உயர்வைக் கைவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1130 வரை மின்கட்டணம் உயரும் என்று மாநில மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவதற்கு இலவச மின்சாரம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த மானியத்தை விட்டுத்தர விரும்புபவர்கள் தாமாக முன்வந்து விட்டுத்தரலாம் என்று கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் மின்சார கட்டணத்திற்கான மானியம் தொடருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு அறிவித்துள்ள உத்தேச மின்கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பு மேலும் கூடுதல் சுமையாக அமையும். எனவே, தமிழக அரசு உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென சிபிஎம் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
மேலும், தமிழக அரசு உத்தேசித்துள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மக்களை அணி திரட்டி மின்வாரிய தலைமை பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் பெருந்திரள் மனு கொடுக்கும் இயக்கம் நடத்திட சிபிஎம் மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.