tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை நியாயம் ; மனித சங்கிலியை அரசு ஆதரிக்க வேண்டும்- சிபிஎம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது நியாயம் அதேசமயம்  காந்தியின் பேரால் மனித சங்கிலியை தமிழ் நாடு அரசு ஆதரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2, அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில், தமிழ் நாட்டில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது.

அண்ணல் காந்தியின் படுகொலை காரணமாக தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, காந்தி பிறந்த நாளில் பேரணி நடத்திட நீதிமன்றம் அனுமதி கொடுத்தது பொருத்தமற்ற முடிவாகும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அண்மைக் காலம் வரையிலும் நடந்த பல்வேறு மத வன்முறை, குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளது. அது பற்றிய வழக்குகளும் உள்ளன. அதன் காரணமாகவே, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழ் நாடு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இந்த சூழலை நீதிமன்றம் கணக்கில் எடுத்திருக்க வேண்டும்.

இப்போது, சிறுபான்மை மத அடிப்படைவாத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், பெரும்பான்மை வகுப்புவாத, பாசிச வகைப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் பேரணி நடந்தால் அது மோசமான விளைவை உருவாக்கும். எனவே, நீதிமன்றம் கொடுத்த அனுமதியை மறுத்து காவல்துறை எடுத்துள்ள முடிவு 100 சதவீதம் நியாயமான ஒன்று.

அதே சமயம், காந்தி பிறந்த நாளில், மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கும் அனுமதி இல்லை என்று செய்திகள் வருகின்றன. அவ்வாறானால் அது சரியான முடிவல்ல. தமிழ் நாடு அரசாங்கம் மதவெறி அமைப்புகளையும், மத நல்லிணக்க நடவடிக்கைகளையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்ப்பது மதவெறி சக்திகளை தனிமைப்படுத்த உதவி செய்யாது.

இவ்விசயத்தில், தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படியான அனுமதியை பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்திட முயற்சி செய்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

;