tamilnadu

img

மேகேதாட்டு அணை தொடர்பாக காவிரி ஆணையத்தில் விவாதிப்பதற்கு சிபிஐஎம் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று மேகதாட்  அணை தொடர்பாக காவிரி ஆணையத்தில் விவாதிப்பதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் ஜூன் 17 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்த கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, மேகேதாட்டுவில் அணை கட்டுவது என்கிற அம்சம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதை எதிர்த்து, தமிழ்நாடு அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழலில், மேகேதாட்டு தொடர்பான விவாதத்தை காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு அத்துமீறிய நடவடிக்கையாகும். தமிழ்நாட்டு நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே பாஜக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கருத வேண்டியுள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் அது தமிழ்நாட்டிற்கான தண்ணீர் வரத்தை பாதிக்கும். ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அந்த தண்ணீரும் கூட மாதவாரியாக கிடைப்பதை தடை செய்வதாகவே இந்த அணை கட்டும் நடவடிக்கை அமைந்திடும். எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இந்த பொருளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டிற்கு காவிரியின் மீதான பாசன உரிமையை நிலைநாட்டும் விதத்தில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதோடு, தொடர்ந்து விழிப்புடன் செயல்படுமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.