tamilnadu

img

காலை சிற்றுண்டித் திட்டத்தையும் ஏழை மாணவர்களையும் கொச்சைப்படுத்திய தினமலருக்கு சிபிஎம் கண்டனம்!

காலை சிற்றுண்டித் திட்டத்தையும் ஏழை மாணவர்களையும் கொச்சைப்படுத்திய தினமலருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தினமலர் நாளேட்டின் ஈரோடு, சேலம் பதிப்புகளில் தமிழ்நாடு அரசு துவக்கியுள்ள காலை சிற்றுண்டித் திட்டத்தை இழிவுபடுத்தும் வகையிலும், அரசுப்பள்ளிகளில் காலை மற்றும் மதிய உணவு சாப்பிடும் ஏழை, எளிய மாணவர்களை கொச்சைப்படுத்தும் வகையிலும் தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் நாட்டிலேயே முதன் முறையாக காலை சிற்றுண்டித் திட்டத்தை தமிழ்நாடு அரசு துவக்கியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மனித வளர்ச்சி குறியீடுகளில் தமிழகம் சிறந்தோங்கி இருப்பதற்கு இத்தகைய திட்டங்களும் முக்கிய காரணியாக அமைந்துள்ளன.

காலையில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதாகவும், இதனால் அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படுவதாகவும் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிலையில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டிய ஒரு திட்டத்தை தினமலர் ஏடு ஊடக நெறிகளுக்கு மாறாக அருவருக்கத்தக்க வகையில் திரித்து வெளியிட்டுள்ளது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

வக்கிரமும், வன்மமும் நிரம்பி வழியும் இத்தகைய செய்தியை வெளியிட்டதற்காக தினமலர் ஏடு தமிழ்நாட்டு மக்களிடமும், மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)  வலியுறுத்துகிறது.

இந்த ஏடு தொடர்ச்சியாக உழைக்கும் மக்களுக்கு எதிராகவும், சிறுபான்மை, பட்டியலின மக்களுக்கு எதிராகவும், சனாதன அநீதிகளுக்கு ஆதரவாகவும் தொடர்ந்து எழுதி வருகிறது. இந்த ஏடு இத்தகைய விஷமப்போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.