சென்னையில், தலித் சமூகத்தை சேர்ந்த கர்ப்பிணி மற்றும் தொழிலாளி மரணங்கள் தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி புளியந்தோப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சையின்றி கர்ப்பிணி ஜனகவள்ளி (வயது 28) ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று மரணமடைந்தார்.
அதேபோல், சேப்பாக்கம் மசூதி தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளி கனகராஜ் (வயது 37) மின்சாரம் தாக்கி ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகராட்சியின் மெத்தனத்தை கண்டித்து மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநகராட்சியில் நடைபெறும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டும், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் தர வேண்டும் ஆகிய கோரிகைகளை அவர் வலியுறுத்தினார்.