tamilnadu

img

கொரோனா வைரஸ் பாதிப்பு: சிபிஐ (எம்) நிகழ்ச்சிகள் ஒத்தி வைப்பு

கொரோனா வைரஸ் தாக்குதல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் சூழலில் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸட் கட்சியின் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின்
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்
ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அளவிலும்,
மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டிருந்த அனைத்து அரங்க மற்றும் பொது
நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் 20-3-2020
அன்று திண்டிவனத்தில் பங்கேற்பதாக இருந்த சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி குறித்த
பட்டறை ஒத்தி வைக்கப்படுகிறது. இதுபோன்று மாவட்டங்களில்
தீர்மானிக்கப்பட்டுள்ள அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்க
வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். உரிய விழிப்புணர்வை உருவாக்கிட
வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
அதேசமயம், அரசுத்தரப்பில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகம் திரளும் இடங்கள்
மூடல் என்ற நடவடிக்கை எடுப்பது மட்டும் போதாது. கொரோனா வைரஸ் பாதிப்பு
பற்றி பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகள் திருப்தியளிப்பதாக இல்லை. கொரோனா
வைரஸ் பாதிப்பில் உள்ளவர்களை அடையாளங் காணவும், அவர்களுக்கு
முறையான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற ஐயம் உள்ளது.
தமிழகத்தில் கொரொனா வைரஸ் பரவாமல் இருப்பது நல்லது. ஆனால் உரிய
பரிசோதனைகள் இல்லாமல் தமிழ்நாட்டில் பாதிப்புகள் இல்லை என அரசு
மெத்தனமாக இருந்து விடக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கும், கண்காணிப்பதற்கும்
உரிய கட்டமைப்புகள் போதுமான அளவு உருவாக்கிட வேண்டும். அண்டை
மாநிலமான கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு திறம்பட
எடுத்திருக்கும் நடவடிக்கைகளையும் கணக்கிலெடுத்து உரிய முயற்சிகளை
போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.