சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்படும் பாதிப்பு அறிவிப்பில் சென்னை மட்டும் 90 சதவீத பங்கு வகிக்கும் நிலையில், தமிழகத்தில் இதுவரை ஏற்படாத வகையில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதிகபட்சமாகச் சென்னையில் 138 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை, செங்கல்பட்டில் தலா 5 பேரும், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கும், பெரம்பலூரில் 2 பேருக்கும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், அரியலூர், கடலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 323 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 48 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1258 ஆக உயர்ந்துள்ளது.