tamilnadu

img

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலையடுத்து  144 தடை உத்தரவு அமல்

கொரோனா அச்சுறுத்தலையடுத்து தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. 

சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் இன்று உலக நாடுகள் அனைத்தையும் தற்போது அச்சுறுத்தி வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலகளாவிய பலி எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது. உலகெங்கிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. 
இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதற்கும் ரயில் சேவை வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது. 
இந்நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியளவில் அமலானது. பொது மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். அதே சமயம் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன். பேருந்துகள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று அரசு அறிவித்துள்ளது.